Wednesday, November 11, 2009

நான் விந்தாகவே வாழ்ந்துவிட்டிருப்பேன்!!


இந்த தலைமுறை-
இதயங்களை கெட்டியாகவே வார்த்துவிட்டது.
வாழ்ந்து பழக நேரமில்லை இவர்களுக்கு!

காலிடறி விழுந்த காரியத்திற்குள்ளும்-எழுந்து அமர்ந்து,
விழுதல் புரிந்து, அங்குலம் அங்குலமாக அளவி ஒய்ந்து,
மேடேறி மேல்வந்து-
ஒரு குடுவையில் வியர்வையையும்,
ஒரு குடுவையில் விளங்கியவையையும்-வழித்தெடுத்து,
காலக்குப்பியில் இட்டு,
திட்டுதிட்டாய் வழ்க்கைவரைய தெரியவில்லை!

புது யுகத்திற்க்கு போகும் அவசரத்தில்
கடந்த காலத்தின் கால்செருப்புகளை தொலைத்தவர்கள்!

தாயின் மரணத்திற்கும் அழதேவையில்லையாம்!
அழுதல் பலவீணமாம்!!
தேவைக்கேற்ப முகமூடிகள் தயரித்துக்கொண்டவர்கள்!

மொட்டுகள் விரியும் வரை பொறுக்கவேண்டாமாம்!
மருந்துகள் கொண்டு
பூவையும் விரைந்து பூப்படையச்செய்தவர்கள்!!

குண்டு தயாரிப்பதை குடிசைதொழிலாக்கியவர்கள்!

மெக்காலேயின் நீட்சியாக
முலை சுருங்கி
புத்தகம் சுமக்க ஏதுவாக
முதுகில் மூட்டையோடு பரிணமித்துவிட்டவர்கள்!

ஒரு இமாலய நம்பிக்கையொடு
புத்தக நடுவில் பத்திரப்படுத்திய மயிலிறகுகள்-
குட்டி போடுவதில்லை இப்பொழுது!
அதற்கும் "அபார்சன்" பழக்கியவர்கள்!

பாட்டி கதை,
நிலா சோறு,
அம்மா மடி,
தொட்டில் தூக்கம்...
அனைத்தையும் துடைத்தெடுத்து
சிலவற்றை பரண்மேலும்,
சிலவற்றை முதியொர் இல்லத்திலும்,
சரிவர அடக்கம் செய்தவர்கள்!

அம்மா
பாலூட்ட,பாசம் காட்ட
கணினி கண்டுபிடித்துவிடுவார்கள்!
மன்னித்துவிடு என்னை..
நான் விந்தாகவே வாழ்ந்துவிட்டிருப்பேன்!!
-----------------------------------------------------------

இது ஒரு மிகச்சிறிய கூட்டத்தை நோக்கி வீசப்பட்ட வரிகள்.
அந்த சிறிய கூட்டத்தில் நீங்களோ நானோ நின்றுகொண்டிருப்போமானால்
இது தடம்பதியாத ஒரு மெல்லிய சவுக்கடி!
இருவருக்கும்.

No comments:

Post a Comment